There is no end to education. It is not that you read a book, pass an examination, and finish with education. The whole of life, from the moment you are born to the moment you die, is a process of learning.

- Jiddu Krishnamurti


Friday, February 10, 2012

பிரமிள் கவிதைகள் - 4


நீ - நான்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம் உன் கோஷம்
அதுவும் வேண்டாம் ஆளைவிடு
என்ற கூச்சல் என் கூச்சல்.

(1986)
மீறல், அக். 1993.


தவளைக் கவிதை

தனக்கு புத்தி 
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்

தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன் 
கல்லை.

‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -

         ’நூறு புத்தரே!
         கோர்த்தரே!
         ஆயிரம் புத்தரே!
         மல்லாத்தரே!
         கல்லேத்தரே!
         ஒரு புத்தரே!
         தத்தரே!
         பித்தரே!


இண்டியன் ரைட்டர் பேட்டி

‘இந்தியாவுக்கு இன்று
எது தேவை?
ஹிந்து மதத்தின்
ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதீயத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
மதச்சார்பின்மைப்
பிரக்ஞையின் வளர்ச்சியா?
அதுவும் க்ஷீணித்து
உப்புச் சப்பற்ற
லெளகீகம் ஆகிவிடும்
ஆத்மீக ஆபத்தா?
மனசின் மர்மத்தை
ஆராயும் புத்தரின்
பேராழம் போன்று
ஒரு புது அகமுக
விஞ்ஞான நோக்கமா?
எது?’ இதைக்கேட்டு
அக்கமும் பக்கமும்
பார்த்துவிட்டு
நடுங்கும் குரலில்
பதிலைச் சொன்னார்
இண்டியன் ரைட்டர்:
’எனது தத்துவம்
என்ன என்கிறீர்கள்
குதிரை கனைக்கிறது
கொசு ஙொய் என்கிறது
மோட்டெருமை போடுகிறது
முக்காரம் இதில்
சத்தம் எது
புத்தம் எது என்று
மண்டையைக் குழப்பாமல்
ஒவ்வொன்றாய் டேப் பண்ணி
ஒழுங்காய் விற்றால் நல்ல
யாவாரம்!’

- பிரமிள்

*
(1986)
மீறல், அக்டோபர் 1993.



முடிச்சுகள்

கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு.

' மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி.

மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லை செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

ஜாதியம்தான் வாய் ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சல்
வேதாந்த வாயலம்பல்.


சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில் 

முடியாது மணலைக்
கயிறாய் திரிக்க
காலத்தைக் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு - நான்.

அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்த விதம்

சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது

சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது

சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது.



இடம்

மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு 
பிராண வாயு 
மனிதாத்மாவுக்கோ
மனம் தான் வெளி.

லயம். ஏப்ரல் 1995.



0 comments: